திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறைக்காவலருக்கு சரமாரி வெட்டு!!
திருச்சி மத்திய சிறையில் காவலராக பணிபுரிபவர் வினோத்பாண்டியன். நேற்று முன்தினம் பணி முடிந்ததும் இவர் மற்றொரு சிறைக்காவலரான தர்மராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
தர்மாஜ் மோட்டார் சைக்கிளை ஓட்ட வினோத் பாண்டியன் பின்னார் அமர்ந்து இருந்தார். மோட்டார் சைக்கிள் ஜெயில்கார்ணர் பகுதியில் வந்த போது அவர்களை 3 பேர் கும்பல் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தது. பின்னர் திடீரென அந்த கும்பல் வினோத்பாண்டியனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் இருவரும் நிலை குலைந்து சாலையில் விழுந்தனர்.
பின்னர் சுதாரித்து எழுவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கே.கே.நகர் போலீசார் காயமடைந்த 2 பேரையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் 2 பேர் ஹெல்மட் அணிந்திருந்ததும், ஒருவர் மட்டும் ஹெல்மட் அணியாமல் இருந்ததும் இதில் ஹெல்மட் அணியாமல் இருந்த நபர் திருச்சி மத்திய சிறையில் கைதியாக இருந்த போது செல்போன் சோதனையில் ஈடுபட்ட வினோத்பாண்டியன் அவரிடம் இருந்த செல்போனை பறித்ததால் இந்த தாக்குலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறைக் காவலர்களை தாக்கி தலைமறைவான 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிறைக்காவலர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating