திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி தானம் கொடுத்த மூதாட்டி: ஆசிரமத்தில் தங்க இடம் கேட்டு வேண்டுகோள்!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தகவல் மையத்துக்கு நேற்று 85 வயது மூதாட்டி ஒருவர் வந்தார். அவரது வலது கையில் கட்டுப்போட்டு இருந்தார். சிலர் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றனர்.
அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்த மூதாட்டி தனது பெயர் பத்மாவதி. நகரியை அடுத்த நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அதிகாரிகளிடம் அவர் ‘‘சொந்த ஊரில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம், வீடு, வீட்டுமனைகள் உள்ளன.
எனக்கு வாரிசு இல்லை. கணவர் சமீபத்தில் இறந்து விட்டார். தனிமையில் நான் இருக்கிறேன். எனது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். அவர்களை வெளியேற்ற முடியவில்லை. எனவே, எனது சொத்துக்களை ஏழுமலையான் கோவிலுக்கு தானமாக எழுதி கொடுத்து விடுகிறேன்’’ என்றார்.
மேலும் தன்னை கோவில் நிர்வாகம் சார்பில் ஆசிரமத்தில் சேர்த்து மறைவுக்கு பின் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
உடனே அதிகாரிகள் நீங்கள் தானமாக எழுதிக் கொடுத்தால் நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி விடுவோம். அதற்கு முன் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என்றனர். அதற்கு பத்மாவதி சம்மதித்தார்.
பத்மாவதி கையில் கட்டுப்போட்டு இருந்ததாலும், அவர் உடல் நலக்குறைவுடன் காணப்பட்டதாலும் அதிகாரிகள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
Average Rating