மனித வெடிகுண்டாக மாறியது ஒரு சிறுவன் : பெனாசிர்
பாகிஸ்தானில் தனது வரவேற்பு ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது ஒரு சிறுவன் என்று முன்னாள் பிரதமர் பெனாசிர் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 18ம் தேதி நாடு திரும்பினார். கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெனாசிர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 143 பேர் பலியாகினர். 400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து பெனாசிர் நிருபர்களிடம் கூறுகையில், “எனது வரவேற்பு ஊர்வலத்தில் நடந்த தாக்குதலுக்கு தீவிரவாதிகள் ஒரு சிறுவனை மனித வெடிகுண்டாக பயன்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த சிறுவனுக்கு என கட்சிகொடி நிறத்தில் உடை அணிவித்து, அவனது உடலில் வெடிகுண்டுகளை கட்டி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். காயமடைந்தவர்கள் சிலரிடம் நான் விசாரித்தபோது இந்த தகவல் தெரியவந்தது” என்றார்.