கிளப் மேலாளர் கைது
பரிசு விழுந்திருப்பதாக அழைத்து கிரடிட் கார்டு நம்பரைப் பெற்று 15 ஆயிரம் மோசடி செய்த தனியார் கிளப் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை அடுத்த பூந்தமல்லி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜானகி ராமன். இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் கிளப் ஒன்றிலிருந்து இவரை செல்போனில் அழைத்துள்ளனர். பரிசு விழுந்திருப்பதாக கூறி தங்கள் அலுவலகத்திற்கு அவரை அழைத்து கிளப்பில் உறுப்பினராகும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு அவர் மறுத்து விட்டார். அவரிடமிருந்து கிரடிட் கார்டு நம்பரைப் பெற்றுக்கொண்டு அவரை அனுப்பிவிட்டனர். சில தினங்கள் கழித்து தனது கணக்கிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் குறைந்திருப்பதை அறிந்த ஜானகிராமன் வங்கியில் விசாரித்துள்ளார். பின்னர் இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இந்தபுகாரின் அடிப்படையில் துணை கமிஷனர் தர்மராஜ் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தனியார் கிளப் மேலாளரான தனராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.