ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும் கல்விக் கருத்தரங்கு…!!
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு!!
வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் 14 மாவட்டங்களிலுள்ள கல்வி நிலையில் பின்தங்கிய தமிழ் மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் (தரம் – 11) பெறுபேறுகளை முன்னேற்றும் முகமாக, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இம் மாத காலப்பகுதிகளில் இலவச கல்விக் கருத்தரங்கை கணித, விஞ்ஞான பாடங்களில் நடாத்த தீர்மானித்துள்ளனர்.
அந்த வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை இரத்தினபுரி, நுவரெலிய, மொனராகலை, கண்டி, மாத்தளை ஆகிய 14 மாவட்டங்களில் 180 இற்கும் அதிகமான பாடசாலைகளை உள்ளடக்கி 88 மையங்களில் சுமார் 10,000 சாதாரண தர மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கை நடாத்தவுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக நாளை (07/10) புதன்கிழமை, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆரம்பமாகவுள்ளதாக ஊடக இணைப்பாளர் தெரிவித்துள்ளார். இவ் வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்ந்து 06வது வருடமாக கல்விச் சமூகத்தின் வரவேற்புடன் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating