வடலூர் அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்…!!
காட்டுமன்னார் கோவில் அருகே கோதண்ட விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 40). விவசாயி. இவரது உறவினர் ஒருவர் நெய்வேலி இந்திராநகர் மாற்று குடியிருப்பில் நேற்று இறந்து விட்டார்.
இதையடுத்து துக்கம் விசாரிக்க செல்வராசு மற்றும் இவரது உறவினர்கள் 15 பேர் ஒரு சுற்றுலா வேனில் கோதண்ட விளாகம் கிராமத்துக்கு சென்றனர். வேனை குமாரகுடியை சேர்ந்த டிரைவர் செந்தில்வேலு (36) ஓட்டி சென்றார்.
பின்னர் துக்கம் விசாரித்து விட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். வடலூர் அருகே மடுவாய் என்ற இடத்தில் வந்தபோது வேனின் முன்பக்க டயர் பஞ்சரானது. இதனால் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த செல்வராசு மற்றும் அவரது உறவினர்கள் சாமிக்கண்ணு (25), ரோஜா மலர் (50), அருந்தேவி (37), ஆதியம்மாள் (45) உள்பட 15 பேரும் படுகாயம் அடைந்தனர். டிரைவர் செந்தில்வேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த 15 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating