கீழக்கரை அருகே ஸ்கூட்டர்-லாரி மோதி விபத்து: 2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி…!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜகுபர் சாதிக். இவரது மகன் செய்யது இப்ராகிம் (வயது 20).டிப்ளமோ படித்து முடித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு செய்யது இப்ராகிம், ஸ்கூட்டரில் ஏர்வாடிக்கு புறப்பட்டார். அப்போது, அவருடன் சீனிமுகமது காசிம் மகன் முகமது பாசித் (14), ஹமீது கான் மகன் அப்துல் ரகுமான் ஜூனைத் (13), செய்யது அபுதாகீர் மகன் ராசிக்பரீத் (22) ஆகியோரும் சென்றனர். ஒரே ஸ்கூட்டரில் 4 பேரும் சென்றுள்ளனர்.
ஏர்வாடி சென்ற அவர்கள் பின்னர் அங்கிருந்து கீழக்கரைக்கு புறப்பட்டனர். வழியில் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு புறப்பட்ட அவர்கள். பொட்டூரணி என்ற பகுதியில் வந்தபோது எதிரே ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி மீன் லாரி வந்தது.
அந்த லாரியும் ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற செய்யது இப்ராகிம், லாரியின் டயரில் சிக்கி தலை நசுங்கி பலியானார். இதேபோல் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியானார்கள்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மகேசுவரி (கீழக்கரை), அசோகன் (மதுவிலக்கு), இன்ஸ்பெக்டர்கள் பால் பாண்டி (ஏர்வாடி), ஆனந்த் (கீழக்கரை) மற்றும் போலீசார் சென்று பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியானர்வர்களில் முகமது பாசித், அப்துல் ரகுமான் ஜீனைத், ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராசிக் பரீத், பி.காம் பட்டதாரி ஆவார். 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் கீழக்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating