பிரபாகரனை நெருங்கியது ராணுவம்?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவருக்கு நெருக்கமான ஒரு சில தளபதிகளும் இருப்பதாகக் கருதப்படும் கடைசி பதுங்கு குழியை வியாழக்கிழமை நெருங்கிவிட்டது இலங்கை ராணுவம். ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கும் இடையில் இப்போது இடைவெளி வெறும் 2,500 அடிகள்தான். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொலைப் படையாகச் செயல்படும் “”கரும்புலிகள்” என்று அழைக்கப்படும் கடற்புலிகள் சுமார் 1,000 பேர் இப்போது அந்த இடத்தைச் சுற்றி அரணாக இருக்கின்றனர். இவர்கள் கமாண்டோ பயிற்சி பெற்றவர்கள். உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மனித குண்டாகச் செயல்படுகிறவர்கள். எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் போரிட்டு தங்களை மாய்த்துக்கொண்டு அவர்களையும் மாய்க்கத் தயங்காதவர்கள். இந்தக் காரணத்தாலும், அந்தப் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான கண்ணிவெடிகளை புலிகள் புதைத்து வைத்திருப்பதாலும் ராணுவத்தால் வேகமாக முன்னேற முடியவில்லை. புலிகளின் கடைசிப் புகலிடம் இதுதான் என்பதால் போர் மிகக் கடுமையாக நடக்கிறது. புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ராணுவத்தை மேற்கொண்டு முன்னேறவிடாமல் தடுத்து வருகின்றனர். விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து கட்டிக்கொண்டே இருந்த மணல் தடுப்பு அரண்களையெல்லாம் இலங்கை ராணுவ தரைப்படை வீரர்கள் பீரங்கிகள் மற்றும் பலம்வாய்ந்த கவச வாகனங்களின் துணையோடு தகர்த்துவிட்டனர். இனி புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் தடுப்பு எதுவும் கிடையாது. அதே சமயம் அந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் இயற்கையான அரண் மட்டுமே புலிகளுக்குக் கேடயமாக இருக்கிறது. புலிகளுக்கு வெளியிலிருந்து ஆயுத உதவியோ, ஆள் உதவியோ வருவதற்கு வழியில்லாமல் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. ராணுவத்தின் தரைப்படை, கடற்படை இரண்டும் அந்த இடத்தைச் சுற்றி வளைத்திருக்கிறது. விமானப் படையும் அவ்வப்போது அந்தப் பகுதி மீது பறந்து போர்க்கள நிலவரத்தைப் புகைப்படம் எடுத்து கொழும்பிலும் வன்னிப்பகுதியிலும் உள்ள ராணுவத் தலைமைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இதைக் கொண்டுதான் ஒவ்வொரு தாக்குதலையும் ராணுவம் முடிவு செய்கிறது. கடைசி அரணும் தகர்ந்த இடத்தில் பிரபாகரன் இருக்கிறாரா என்ற சந்தேகமும் ராணுவத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் புலிகளின் தற்காப்பையும் தாக்குதலையும் பார்த்தால் “”மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய” தலைவர் ஒருவர் அவர்களுடன் இருப்பது புலனாகிறது.
2 thoughts on “பிரபாகரனை நெருங்கியது ராணுவம்?”
Leave a Reply
You must be logged in to post a comment.
புலிகள் தம்மைத் தவிர வேறு யாரும் வாழவோ அல்லது அடுத்தவருக்கு ஏதாவது செய்யக் கூட விடுவதில்லை. அனைத்தையும் தமது கட்டுப்பாட்டிலேயே நடக்க வேண்டும் என்ற கருத்தில் நடப்பவர்கள். அதிகம் போனால் துரோகி பட்டியலில் இணைத்து போடுவார்கள்.
மூச்சு விடுவது கூட அவர்கள் அனுமதியால்தான் முடியும் என்ற நிலை இருந்தால் அதையும் கூடத் செய்யத் தயங்காதவர்கள் புலிகள். அப்படி ஒரு கேடு கெட்ட ஒரு அமைப்பு.
இந்த பயத்திலேயே பலர் புலி சார்பாளராக நடிப்பது பலரும் அறிந்த விடயம்.
துரோகிகள் ஏன் எப்படி உருவானார்கள்?இவ்வளவுக்கும் காரணமாக இருந்த விடயம் புலிகளின் அதிகார வெறியேயாகும்.
பிரபாகரன் தானே தமிழீழத்தின் ஏகப் பிரதிநிதியாக இருக்க வேண்டுமென நினைத்து சகோதர இயக்கப் போராளிகளை துரோகிகளென பெயரிட்டு மிருகங்களை வேட்டையாடுவதைப் போன்று சுட்டுக் கொலை செய்து தெருவிலே டயர் போட்டு எரித்ததை என்னவென்று சொல்வது…
புலிகளின் வெறியாட்டத்துக்குப் பயந்து உயிர் பிழைத்துக் கொள்ள உடனடி நிவாரணமாக ஸ்ரீலங்கா படைமுகாமுக்குள் அடைக்கலம் கோரிய தமிழ் இளைஞர்கள் புலிகளின் பார்வையில் துரோகிகளாக சோடிக்கப்பட்டு சந்தர்ப்பம் பார்த்து கொல்லப்பட்டார்கள். இதனால் பயமடைந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த அப்பாவிகள் வெளியே வரமுடியாமல் துணைப்படைகளாக மாற வேண்டிய துர்ப்பாக்கியம் நிறைந்த சம்பவங்கள் ஏராளம்.