யாழ் நகரில் ஆர்ப்பாட்ட பேரணி??? யாரால் நடத்தப்பட்டது?
யாழ் நகரில் இன்று (20) காலை இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்ற பாதகைகளில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகளவில் காணப்பட்டன. அதே சமயம் இலங்கையின் தேசிய கொடியினை தலை கீழாக பிடித்த வண்ணம் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இலங்கை எமது தாய் நாடு என கோஷம் எழுப்பினார்
மற்றுமொருவர் தலை கீழாக பாதைகையை ஏந்தி சென்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அத்துடன் ஐ.நாவுக்கான சர்வதேச மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு பெண் என அறியாத ஆர்ப்பாட்டகாரர்கள் ஆண் என நினைத்து “நவநீதன் நிர்வாணமாவார்” எனவும் இந்திய துணைத்தூதரகத்தின் துணைதூதுவர் மகாலிங்கத்தை “மாதாலிங்கம்” என எழுதப்பட்ட பாதாகைகளை ஏந்தி சென்றார்கள்.
யாழ் நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறான தமிழ் எழுத்து பிழைகளுடன் பலர் ஆர்ப்பாட்ட பேரணியில் பாதாகைகளை ஏந்தி சென்றதையிட்டு வீதியோரங்களில் நின்று வேடிக்கை பார்த்த யாழ்.பொது மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர். அதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் சகோதர மொழியினை பேசி சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதனை அவதானிக்கும் போது கல்விக்கு பெயர்போன யாழில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மொழியில் எழுதத் தெரியாதவர்கள் அல்லது தமிழ்மொழி தெரியாதவர்கள்தான் கலந்து கொண்டனரா? அதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களும் தமிழ்மொழி தெரியாதவர்களா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating