சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் மனைவியிடம் 5½ பவுன் நகை பறிப்பு!!
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இளங்கோ தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் திடீரென வீட்டின் கதவு மீது கல் வீசும் சத்தம் கேட்டது. இதையடுத்து ஜெயலட்சுமி கதவை திறந்த போது அங்கு பதுங்கி இருந்த 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி திருடன், திருடன் என கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். எனினும் கொள்ளையர்கள் இருட்டான பகுதிக்கு தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து இளங்கோ திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில் பகுதியில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். எனவே கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating