தூங்கும் வசதி ரெயில் பெட்டிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்வு!!
அனைத்து ரெயில்களிலும் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள் ஆகியவற்றில் பெண்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு பெட்டிக்கு 2 படுக்கை வீதம் ஒதுக்கீடு செய்யும் முறை, கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந் தேதியில் இருந்து அமலில் உள்ளது.
இந்நிலையில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்து இருந்தார்.
அதன்படி, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், பெண்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு பெட்டிக்கு 2 படுக்கையாக உள்ள ஒதுக்கீடு, 4 படுக்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து ரெயில்வே கோட்டங்களுக்கும் ரெயில்வே வாரியம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகளிலும், மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகளிலும் தற்போதைய ஒதுக்கீடே நீடிக்கும்.
மேலும், நடு மற்றும் மேல் படுக்கைகள் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு கீழ் படுக்கை காலியாக இருந்தால், அவற்றை ‘முதலில் வந்தவருக்கு முதலில்’ என்ற அடிப்படையில் ஒதுக்குமாறு டிக்கெட் பரிசோதகர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Average Rating