மதுராவில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது: செல்போன்-பணம் பறிமுதல்!!
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே ஐ.பி.எல். போட்டியை வைத்து சூதாட்டமும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு உத்தர பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் 14 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி பிரயதர்ஷினி தலைமையில் போலீசார், மதுராவில் உள்ள ஒரு கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 5 இளைஞர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 9 மொபைல் போன்கள், பந்தயம் தொடர்பான பதிவேடுகள் மற்றும் 14 ஆயிரத்து 570 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கொடுக்கும் தகவல்கள் வரும் நாட்களில் சோதனைகளை தீவிரப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த அதிரடி சோதனை குறித்து மதுரா போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், ‘‘எல்லா காவல்நிலையத்திற்கும் உட்பட்ட பகுதியில் சோதனை நடத்தப்படும். ஏனென்றால், ஐ.பி.எல். சூதாட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. மழைக்காலத்தில் காளான் தோன்றுவதுபோல் ஆங்காங்கே ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக பல்வேறு காலனிகளில் இருந்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்’’ என்றார்.
மதுரா மார்க்கெட்டில் உள்ள பல கடைகளில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாகவும், இதில் ஒரு ரூபாய் முதல் கோடி ரூபாய் வரை பந்தயம் கட்டப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஐ.பி.எல். சூதாட்ட நெட்வொர்க் டெல்லி, மும்பைக்கும் பரவியிருப்பதாகவும், பெரிய தரகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.
Average Rating