துருக்கி அருகே அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலியான சோகம்…!!
துருக்கி அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். கிரீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த படகு துருக்கியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடற்பகுதியில் போட்ரம் என்ற நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவிற்கும் அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு அகதிகளாக செல்பவர்கள் கடல் மார்க்கமாக உரிய ஆவணம் இல்லாமல் ஏஜண்டுகள் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ படகு மூலம் தப்பிச் செல்கின்றனர்.
உரிய ஆவணம் இல்லாமல் இதுபோன்று செல்லும் அகதிகளின் படகு விபத்துக்குள்ளாவதும், ஏராளமானோர் உயிரிழந்து வருவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக துருக்கி வழியாக சென்ற படகு ஒன்று தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நிகழ்ந்த பகுதியின் வழியாக நேற்று சென்ற துருக்கி மீனவர்கள் அகதிகளின் அலறல் சத்தம் கேட்டு, கப்பற்படை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விரைந்து வந்த துருக்கி கடற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய படகில் ஈராக், பாகிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளை சேர்ந்த அகதிகள் வந்ததாகவும், அதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிரியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் துருக்கி வழியாக இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் ஊடுருவி சென்றுள்ளனர். அவ்வாறு மத்திய தரைக்கடல் வழியாக சென்ற அகதிகள் 600-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating