ஹிக்கடுவ தமீர மென்டிஸின் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது…!!
கடந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி களுபே, ஹிக்கடுவ சந்தியில் தமீர மென்டிஸ் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுமுல்ல, ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக்க தமீர மென்டிஸ் எனும் குறித்த நபரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது ரங்கல்ல பாலத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ரவீந்தர புஷ்பகுமார அல்லது பொடி அமில என அழைக்கப்படும் ஒருவரும் கைதான சந்தேகநபர்களுக்குள் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வைபவமொன்றின் போது ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு, இருதரப்புக்கு இடையேயான மோதலாக மாறியதை அடுத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 13 ரவைகளையும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுக்கு ரி 56 ரக துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating