மாத்தளை – கொழும்பு நேரடி ரயில் சேவை தடைப்பட்டமை தொடர்பில் கண்டனம்…!!
மாத்தளை – கொழும்புக்கு இடையிலான நேரடி ரயில் சேவை தடைப்பட்டமை தொடர்பில், பயணிகள் போக்குவரத்து உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய திட்டம் கண்டனம் வௌியிட்டுள்ளது.
தற்போது ரயில் மூலம் மாத்தளையிலிருந்து கொழும்புக்கு வருகைதரும் பயணிகள் கண்டிக்கு சென்று அங்கிருந்து கொழும்புக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய திட்டத்தின் தலைவர் ரஞ்ஜித் விதானகே தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக மாத்தளையிலிருந்து கொழும்புக்கான நேரடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளையிலிருந்து கண்டிக்கு பயணம் செய்து அங்கிருந்து கொழும்புக்கு பயணம் மேற்கொள்வதால் பயணிகளின் நேரம் வீணடிக்கப்படுவதாவும் ரஞ்ஜித் விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் மாத்தளையிலிருந்து கொழும்புக்கான நேரடி ரயில் சேவையின் மூலம் அரசாங்கத்திற்கு அதிகளவு வருமானம் கிடைப்பதனால் இது தொடர்பில் ஆராய்ந்து மீண்டும் நேரடி ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்ஜித் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளையிலிருந்து கொழும்புக்கு ரயில் மூலம் பயணிக்கும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
ரயில் இஞ்ஜினின் பழுது காரணமாக மாத்தளை கொழும்புக்கான நேரடி ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய இஞ்சினை பொருத்தி எதிர்காலத்தில் இந்த சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Average Rating