கோவையில் 15 அடி ஆழ குழிக்குள் கான்கிரீட் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி…!!
கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜி.டி.நாயுடு மியூசியத்தின் பின்பறம் கட்டிட விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
கட்டிட விரிவாக்கத்திற்காக 15 அடி ஆழத்திற்கு அஸ்திவாரக்குழி தோண்டப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களாக இந்த குழிக்குள் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு வந்தது. நேற்று இரவு 8.30 மணி அளவில் நீலாம்பூரில் இருந்து கான்கிரீட் கலவை ஏற்றி வந்தது.
லாரியை சேலம் ஆத்தூரை சேர்ந்த செல்லமுத்து(வயது 40) ஓட்டி வந்தார். கிளீனராக திருச்சி எதுமலையை சேர்ந்த தினேஷ் (18) இருந்தார். கான்கிரீட் கலவையை குழிக்குள் கொட்டுவதற்காக டிரைவர் லாரியை பின்னோக்கி நகர்த்திய போது திடீரென லாரி 15 அடி ஆழ குழிக்குள் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் லாரியில் சிக்கிய டிரைவர் செல்லமுத்து, கிளீனர் தினேஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து சென்றனர். குழிக்குள் கவிழ்ந்த லாரியை மீட்க 2 ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு 2 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் லாரியை வெளியே இழுக்க முடியவில்லை.
இதையடுத்து 11 மணி அளவில் மூன்றாவதாக மிகப்பெரிய ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. 3 மணி நேர போராட்டத்திற்கு பின் நள்ளிரவு 1 மணி அளவில் டிரைவர், கிளீனரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் என்ஜினீயர் கார்த்தி என்பவர் சூப்பர்வைசராக இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று செல்லமுத்து, தினேஷ் ஆகியோரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் இருவரின் உடல் களை பார்த்து கதறி அழுதனர். விபத்து குறித்து தொழிலாளி சரவணன் கொடுத்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating