காயமடைந்த யுவதிகள் அளித்த வாக்குமூலத்தால் உறவினர்கள் கைது
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு செஞ்சோலைமீது கடந்த 14ம் திகதி நடத்தப்பட்ட வான்தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மூன்று யுவதிகள் தமது கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவித்ததையடுத்து அவர்களின் நெருங்கிய உறவினர்கள் சிலரை புலிகள் கைதுசெய்து விசாரித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் புலிகளால் ஆயுதப் பயிற்சிக்கென ஆகஸ்ட் 10ம்திகதி வற்புறுத்தி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பயிற்சிக்கு வராவிட்டால் கல்வியைத் தொடர அனுமதிக்க மாட்டோமென்றும் கூறியே புலிகள் பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாகவும் மேற்படி யுவதிகள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் தமக்கு பயிற்சி வழங்கியவர்களின் பெயர்களையும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நடவடிக்கையே புலிகளை ஆத்திரமடையச் செய்ததாகவும் இதனாலேயே உறவினர்களை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.