நகை பட்டறை பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி 5 லட்சம் கொள்ளை!!
பாரிமுனையில் உள்ள நகை பட்டறையில் 5 லட்சம், ஒரு கிலோ வெள்ளி கட்டியை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். பாரிமுனை சுப்பராயன் தெருவில் உள்ள காயத்ரி பிளாசாவில் நகை பட்டறை நடத்தி வருபவர் அபாசாப் (53). இவர், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆர்டரின் பேரில் நகை மற்றும் பொருட்கள் செய்து தருவது வழக்கம். இந்த பட்டறையில் 4 பேர் வேலை பார்க்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அபாசாப் பட்டறையை மூடிவிட்டு சென்றார். நேற்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் பட்டறையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பட்டறையில் வைத்திருந்த 5 லட்சம், ஒரு கிலோ வெள்ளி கட்டி கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து பூக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை நிபுணர்களை வரவழைத்து, கடையில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
பட்டறையில் வேலை பார்ப்பவர்கள் திருட்டில் ஈடுபட்டார்களா அல்லது வடநாட்டு கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating