இந்தியா – வியட்நாம் இடையே இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தம்!!
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்படுவது உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும், வியட்நாமும் கையெழுத்திட்டுள்ளன. வியட்நாம் அதிபர் டிரான் தை குவாங், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். டெல்லியில் நேற்று காலை அவரை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் குவாங்கும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு இருநாடுகள் இடையே, அணுசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், விவசாயம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு, இந்தோ – பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘‘இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இறையாண்மை, சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும். இது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த பிராந்தியத்தின் வளம், சுதந்திரம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக இந்தியாவும், வியட்நாமும் இணைந்து செயல்படும்’’ என்றார். குவாங் கூறுகையில், ‘‘ஏசியான் உறுப்பு நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள பன்முக உறவை மேலும் பலப்படுத்துவதற்கு வியட்நாம் துணை நிற்கும். இந்தோ – பசிபிக் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும் நடக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்’’ என்றார். இந்தோ- பசிபிக் பகுதியில் அமைந்துள்ள தென் சீன கடல் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
இது தொடர்பாக வியட்நாம் உள்ளிட்ட ஏசியான் உறுப்பு நாடுகளுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்த கடல் எல்லை பிரச்னைக்கு சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சீனா அதற்கு உடன்பட மறுக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் மட்டுமே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சீனா கூறி வருகிறது. பிரதமர் மோடியும், குவாங்கும் நேற்று செய்த ஒப்பந்தத்திலும், பேட்டிகளிலும் இந்த பிரச்னையைதான் மறைமுகமாக குறிப்பிட்டனர்.
Average Rating