ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை வந்தார்; வவுனியா சென்று நிலைமைகளைப் பார்வையிடுவார்
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் திட்டமிட்டபடி சனிக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வவுனியா சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 20ம் திகதி முதல் பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள நிலையில், வவுனியா நகரம் இடம்பெயர்ந்தவர்களால் நிரம்பி வழிகிறது. மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்திருப்பதால், இவர்களுக்கு வேண்டிய அவசர உதவிகளைச் செய்ய முடியாமல் அரசாங்க முகவர்களும், தொண்டு நிறுவனங்களும் திண்டாடி வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் இன்னும் சிக்கியுள்ள ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உணவு, மருந்துப்பொருள் எதுவுமின்றி இன்னும் மோசமான மனிதாபிமான அவலங்களுக்கு முகம்கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், வவுனியா செல்லும் ஹோல்ம்ஸ் அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஐ.நா.வின் உதவிப் பணிகளை முடுக்கிவிடுவதுடன், பாதுகாப்பு வலயத்துக்குள் இன்னும் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பது தொடர்பாகவும் ஆராய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நடைபெற்றுவரும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படவேண்டும் என்று ஐ.நா. நேற்றுக் கோரியிருந்தது.
மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து மக்களை மீட்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை அனுப்பப்படுவார் என்றும் அது நேற்று அறிவித்திருந்தது.
மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேயக் குழுக்கள் அனுப்பப்படவேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை வந்துள்ள ஜோன் ஹோல்ம்ஸ் இதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating