யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயக்க நடவடிக்கை
யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் அவை இயங்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளதென கைத்தொழில் அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம்மேற்கொண்ட அமைச்சர் யாழ்.செயலகத்தில் சிறு கைத்தொழில் மற்றும் நடுத்தரக் கைத்தொழில்துறையினருக்கு இயந்திரங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். காங்கேசந்துறை சிமெந்து தொழிற்சாலை மீள இயங்கச்செய்ய சர்வதேசமட்டத்தில் கேள்விகள் கோரப்பட்டுள்ளன. 51சதவீதம் அரசினதும் 49சதவீதம் வெளிநாட்டினதும் மூலதனத்துடன் தொழிற்சாலை இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் கண்ணிவெடிகள் இப்போது அகற்றப்பட்டு வருகின்றன. அப்பணி முடிவுற்றதும் அவற்றை இயக்க ஏற்பாடு செய்யப்படும். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் துறையினருக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating