முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் சாத்தியம்
அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக்குமிடையில் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் கூறப்படுகிறது. அமெரிக்க கிறீன்கார்ட் உரிமையாளரான சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்நாட்டு உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 4ம் திகதி சரத் பொன்சேகாவுடன் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிறீன்கார்ட் சலுகையை நீடித்துக் கொள்ளும் நோக்கில் சரத் பொன்சேகாவும், அவரது பாரியார் அனோமாவும் தற்போது அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த புலி உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்தியதாக ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜூலை மாதம் 18ம் திகதி அம்பலாங்கொடையில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating