இராணுவத்தினருக்கும் கருணா தரப்பினருக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது -மங்கள
விடுதலைப்புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தையில் இணைத்துக் கொள்வதற்காக சர்வதேச சமூகம் அவர்களுக்கு புரியும் பாஷையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் முடக்குவதன் மூலமாக அவர்களை சமாதான மேசைக்கு கொண்டுவர முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நோர்வேக்குச் சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர ஒஸ்லோவில் நேற்று நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் யோனாஸ் கார் ஸரோரியை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது:
புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை குறிப்பாக வெளிநாடுகளில் நிதி திரட்டல், ஆயுதம் கடத்தல் மற்றும் புலிகளுக்கு ஆதரவான சர்வதேச குரலை ஒடுக்குவதன் மூலமாகவே புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர முடியும். புலிகளுடன் பேச்சு நடத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மீண்டுமொரு முறை ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலமாகவே தீர்வு காணமுடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றது.
பேச்சுவார்த்தையின் மூலமாக எட்டப்படுகின்ற தீர்வு பிரிக்கப்படாத இலங்கைக்குள் நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் அமைய வேண்டும். அதற்கு அரசாங்கம் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றது. அதேவேளை நாட்டை பிரிக்கவோ, வேறு ராஜ்ஜியத்தை உருவாக்கவோ அரசாங்கம் ஒருபோதும் இடம் வழங்கப்போவதில்லை.
அத்துடன் நோர்வே தரப்பினர் அரசாங்கத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஐந்து கேள்விகளை அனுப்பி வைத்துள்ளனர். அக்கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் கூடிய விரைவில் அக்கேள்விகளுக்கு பதிலளிக்கும். அத்துடன் புலிகள் கூறுவதை போல கருணா தரப்பினருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் கிடையாது. புலிகள் தரப்பிலிருந்து விலகுபவர்களை கொன்றொழிக்க முடியாத பட்சத்தில் அந்தக் குழுவினர் அரசாங்க படையினருடன் இணைந்து செய்படுவதாக கூறுகின்றனர்.