அண்ணனுடன் ஸ்கூட்டியில் சென்ற 10–ம் வகுப்பு மாணவி பஸ்சில் சிக்கி பலி!!
கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கங்காதேவி (வயது16). மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை கங்காதேவியை அவரது அண்ணன் விக்னேஸ் ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.
9 மணி அளவில் மந்தைவெளி தேவநாதன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது கிழக்கு தாம்பரத்தில் இருந்து ஐகோர்ட்டு செல்லும் மாநகர பஸ் (தடம் எண். எச்51) ஸ்கூட்டியை உரசுவது போல் கடந்தது.
அப்போது கங்காதேவி தோளில் மாட்டியிருந்த ஸ்கூல் பேக் பஸ்சில் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய அவர் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார்.
கங்காதேவியை பஸ் சில அடி தூரம் இழுத்து சென்றது. இதனால் தலையில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் கங்காதேவி அண்ணன் விக்னேசுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கங்காதேவி உடலைப்பார்த்து அவரது தாய் மற்றும் உறவினர்கள், மாணவிகள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமரன் விசாரணை நடத்தினார். கங்காதேவி உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மரணம் அடைந்த கங்காதேவிக்கு தந்தை இல்லை. காயம் அடைந்த விக்னேஸ் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
Average Rating