ருத்ராட்ச மாலையில் தாலி அணியவில்லை: குஷ்பு!!
குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. விழா ஒன்றுக்கு இதை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துறவிகளும், ஆன்மீக வாதிகளும் அணியும் ருத்ராட்ச மாலையை அவர் இழிவுபடுத்தி விட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின.
கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே படவிழா ஒன்றில் செருப்பு காலுடன் சாமி சிலை அருகில் உட்கார்ந்து இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு கற்பு பற்றி கருத்து சொல்லி எதிர்ப்புக்கு ஆளானார். இப்போது ருத்ராட்ச மாலை தாலி பிரச்சினையில் சிக்கியுள்ளார். இந்த தாலி சர்ச்சைக்கு தற்போது அவர் விளக்கம் அளித்த குஷ்பு கூறியதாவது:–
நான் அணிந்தது ருத்ராட்ச மாலை அல்ல. பாரம்பரியமிக்க நகையின் ஒரு பகுதிதான் அது. நகரம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அந்த நகையை கழுத்தில் அணிந்து இருந்தேன். அது பார்க்க அழகாக இருந்தது. அதை ருத்ராட்ச மாலை என நினைத்து பலரும் என்னிடம் கேட்டார்கள். நான் விளக்கம் சொன்னேன். ஆனால் இப்போது பத்திரிகைகளில் அந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நான் உண்மையான ருத்ராட்ச மாலையை தாலியாக செய்து அணிந்துள்ளதாக செய்தி வெளியிட்டு விட்டார்கள். இதை உண்மை என்று நம்பி ஒருவர் எனக்கு எதிராக வழக்கும் போட்டு விட்டார். ருத்ராட்சம் தெய்வீகமானது என்றும், முனிவர்கள், யோகிகள் அணியக்கூடியது என்றும் படித்து இருக்கிறேன். ருத்ராட்ச மாலை அணிவதால் நல்ல பலன்கள் உண்டாகும் என்றும் கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் ருத்ராட்ச மாலைக்கும் நான் கழுத்தில் அணிந்த மாலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாலி அணிவது நமது சம்பிரதாயம். நான் என்ன வகையான தாலி அணிந்துள்ளேன் என்று மற்றவர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
Average Rating