போதை பொருள் கடத்தல் வழக்கு: மாடல் அழகி, இணை இயக்குனரை போலீஸ் காவலில் எடுக்க மனு!!
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோக்கைன் போதை மருந்துடன் மலையாள திரைப்பட இணை இயக்குனர் பிளஸ்சி சில்வஸ்டர், நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் மாடல் அழகி ரேஷ்மா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை கொச்சி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கைதானவர்களுக்கு சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என்று கொச்சி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கேரளா முழுவதும் கண்காணிப்பு பணியினையும் தீவிரப்படுத்தினர்.
இதில் 2 நாட்களுக்கு முன்பு சாய் நைனேஷ் (வயது 32) என்ற வாலிபர் கஞ்சா பொட்டலங்களுடன் போலீசில் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது, அவருக்கும் கொச்சி அடுக்கு மாடி குடியிருப்பில் கைதான இணை இயக்குனர் பிளஸ்சி மற்றும் மாடல் அழகி ரேஷ்மா ஆகியோருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் நைனேசின் உறவினர் விவேக் என்பவர் மூலம் இவர்களின் தொடர்பு கிடைத்ததாகவும் நைனேஷ் கூறினார்.
நைனேஷ் குறிப்பிட்ட விவேக் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் போதைபொருள் கடத்தல் வழக்குகள் உள்ளன. அவரை பிடித்தால் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்குமென போலீசார் கருதுகிறார்கள்.
இதற்காக ஜெயிலில் இருக்கும் சினிமா இணை இயக்குனர் பிளஸ்சி, மாடல் அழகி ரேஷ்மா ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கொச்சி போலீசார் எர்ணாகுளம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
Average Rating