திண்டிவனம் அருகே 2 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை: தாய் தற்கொலை முயற்சி!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 32), விவசாயி. இவருடைய மனைவி மேனகா (26). இவர்களுக்கு புருஷோத்தமன்(5) என்ற மகனும், சர்மி(3) என்ற மகளும் இருந்தனர். புருஷோத்தமன் மனவளர்ச்சி குன்றியவன் என்பதால் அவனை திண்டிவனம் அருகே சின்னநெற்குணம் கிராமத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சேர்த்து இருந்தனர்.
நேற்று முன்தினம் மாலையில் பள்ளியில் இருந்த புருஷோத்தமனை பார்க்க மகள் சர்மியுடன் மேனகா சென்றார். அங்கிருந்த புருஷோத்தமனை அழைத்துக்கொண்டு மேனகா வெளியே வந்தார். தனது 2 குழந்தைகளையும் அங்குள்ள வயல்வெளிக்கு அழைத்துச்சென்ற மேனகா, திடீரென வயலில் இருந்த தரைக்கிணற்றில் புருஷோத்தமன், சர்மி இருவரையும் தூக்கி வீசினார். இதில் சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
பின்னர் மேனகா தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து திராவகம் மற்றும் பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். தனது கணவர் சாந்தகுமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறினார். இதனிடையே தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மேனகாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் மிதந்த 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனவளர்ச்சி குன்றிய மகனால் மிகவும் விரக்தி அடைந்த மேனகா தனது குழந்தைகளை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரியவந்தது. வேறு ஏதும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating