ஊட்டியில் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்!!
நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது.
ஊட்டியில் மதியம் 1 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இந்த மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சிலர் குடைபிடித்து கொண்டு படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினர்.
ஆனால் பலத்த மழை பெய்ய தொடங்கியதால் படகு இல்ல அதிகாரிகள் அவர்களை கரைக்கு திரும்பும்படி அறிவுறுத்தினர். மேலும் மழை பெய்து முடியும் வரை மிதி படகு சவாரி மற்றும், துடுப்பு படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டது.
பலத்த மழை காரணமாக ஊட்டி மத்திய பஸ் நிலையம் சாலை, சேரிங்கிராஸ், எட்டின்ஸ் ரோடு, படகு இல்ல சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஊட்டி மார்க்கெட்டுக்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள், பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். கடை உரிமையாளர்கள் கடையில் தேங்கி நின்ற தண்ணீரை பாத்திரம் கொண்டு வாரி இறைத்து வெளியேற்றினர்.
Average Rating