TMVP பிரதிநிதிகளுடன் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையிலான குழுவினர் சந்திப்பு
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரவிந்திரநாத் தலைமையிலான குழுவினர் கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் தலைமைச் செயலகம் மீனகத்தில் பொறுப்பாளர் பிரதீப் தலைமையிலான பிரதிநிதிகளை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கிழக்கு மாணவர்களின் கல்வியில் ஆதாரமாய் விளங்கும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுகின்ற அந்நியத் தலையீடுகள் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், பல்கலைக்கழக அபிவிருத்தி செயற்திட்டங்கள் பாதிக்கப்படுவது குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
கிழக்கு மக்களின் கல்வியை சீர்குலைக்கவேண்டும் என செயற்படும் சில சக்திகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுகின்றமையினால் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்து இச்சந்திப்பில் கவலை தெரிவிக்கப்பட்டதுடன் அத்தலையீடுகளை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் நிரந்தர நியமனத்தின் போது அவ்வூழியர்களின் தகைமை, அனுபவத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவற்றை விட கிழக்கு மக்களின் வாழ்வாதார, சுயதொழில் முயற்சிகளில் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆற்றவேண்டிய பங்கு குறித்தும் அவற்றை முன்னெடுப்பதற்கு தேவையான வழிவகைகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டதுடன் இதற்காக இருதரப்பும் இணைந்து செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு மிகச் சுமுகமாகவும், திருப்திகரமாகவும் அமைந்ததுடன் பல்கலைக்கழத்தினதும் மாணவர்களினதும் நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயற்படுவதுடன் எதிர்காலத்தில் இது போன்ற ஆரோக்கியமான சந்திப்புக்களை மேற்கொள்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Thanks…..WWW.ATHIRADY.COM