வியாபாரியிடம் ரூ.27½ லட்சம் கொள்ளையடித்த ஆந்திர போலீசார் 3 பேர் கைது!!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், யெம்மிகனூரில் இருந்து தங்க நகை வியாபாரி ஒருவர் நகைகள் வாங்குவதற்காக ரூ.27½ லட்சத்துடன் பெங்களூருவுக்கு கடந்த மார்ச் மாதம் பஸ்சில் வந்தார். அவர் பஸ்சை விட்டு இறங்கியபோது வருமானவரி இலாகா அதிகாரிகள் என்று 3 பேர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின்னர் அவரை இழுத்துச்சென்று ஒரு காரில் ஏற்றி பெங்களூரு புறநகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வைத்திருந்த பணப்பை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து, தங்க நகை வியாபாரி பெங்களூரு மாநகர போலீசில் புகார் செய்தார். பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பணி புரியும் போலீசார் என்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து கர்னூல் சென்ற பெங்களூரு போலீசார் தங்க நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த 3 பேரையும் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணமும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
Average Rating