வங்காளதேச பிரதமருக்கு காமதேனு பசு, கற்பக விருட்சம் பொறிக்கப்பட்ட திரைச்சீலையை பரிசளித்த மோடி!!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசத்துக்கு இன்று காலை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அரசு மரபுகளை மீறிய வகையில் டாக்கா விமான நிலையத்துக்கே வந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா வரவேற்றார்.
விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி அந்நாட்டு ராணுவப் படையினர் அளித்த வரவேற்பு மரியாதையை மோடி ஏற்று கொண்டார். பின்னர், 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப்போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற புதிய நாடு உருவாக காரணமாக இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடத்தில் அவரது படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருடன் சேர்ந்து கொல்கத்தா-டாக்கா-அகர்தலா மற்றும் டாக்கா-ஷில்லாங்-கவுகாத்தி வழித்தடம் வழியாக செல்லும் இரண்டு பஸ் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நில எல்லை வரையறை ஒப்பந்தம் கையொப்பமானது.
ஷேக் ஹசீனாவுக்கு காமதேனு பசு, கற்பக விருட்சம் ஆகியவை பொறிக்கப்பட்ட அழகிய வேலைப்பாடு கொண்ட திரைச்சீலையை நினைவுப்பரிசாக மோடி வழங்கினார்.
Average Rating