மேற்கு வங்காள அரசு ஆய்வு: மேகி நூடுல்ஸ்சில் எந்த ஆபத்தும் இல்லை – தடை விதிக்க மம்தாபானர்ஜி மறுப்பு!!
நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக வேதிப் பொருள் கலந்து இருப்பதாக கூறி டெல்லி, கேரளா, தமிழ்நாடு, காஷ்மீர், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்கள் அதன் விற்பனைக்கு தடை விதித்து உள்ளன.
மற்ற மாநிலங்களும் மேகியை ஆய்வு செய்து வருகின்றன. நாடு முழுவதும் 9 வகையான மேகி நூடுல்ஸ்களை திரும்ப பெறுமாறு நெஸ்லே நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது. மேகி நூடுல்ஸ்கள் பாதுகாப்பற்றவை என்றும் உண்பதற்கு அபாயகரமானவை என்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று மேற்குவங்காள முதல்–மந்திரி மம்தாபானர்ஜி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:–
நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ்சின் தரம் பற்றி ஆய்வு செய்யப்பட்ட நிலையில் மேற்கு வங்காள மாநில அரசும் கொல்கத்தா மாநகராட்சியும் இணைந்து 8 இடங்களில் மேகி நூடுல்ஸ் பொட்டலங்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினோம்.
இதில் எந்த ஆபத்தும் இல்லை என்று கண்டறியப்பட்டது. ஏதாவது ஆபத்து இருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் எந்த ஆபத்தும் கண்டறியப்படாமல் அதற்கு எப்படி தடை விதிக்க முடியும். ஆனால் மத்திய அரசு நாடு முழுவதும் 9 வகை நூடுல்ஸ்களை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது. எனவே தேவைப்பட்டால் மறு ஆய்வுக்கு அனுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மம்தாபானர்ஜியின் அறிவிப்பை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் மேஜி நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்படவில்லை. இதனால் அங்கு தாராளமாக மேகி விற்பனை செய்யப்படுகிறது. மம்தாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்டு தலைவர் சூர்யகாந்தா மிஸ்ரா கூறுகையில், மத்திய அரசு நாடு முழுவதும் மேகியை திரும்ப பெற உத்தரவிட்ட நிலையில் இங்கு மட்டும் அனுமதித்தது ஆச்சரியமாக உள்ளது என்றார். இதே போல் காங்கிரஸ் கட்சியும் மம்தா முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பீகாரில் நேற்று மாலை முதல் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating