30 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை: சென்னை போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது வழக்கு!!
அருமனை அருகே வெள்ளச்சிபாறை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷா (வயது 27). இவருக்கும் குளப்புரம் பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் (37) என்பவருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு சுனில்குமார் அவரது தாயார் லலிதா மற்றும் உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக மார்த்தாண்டம் மகளிர் போலீசில் அனிஷா புகார் செய்தார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
எனக்கும் அனில்குமாருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3–ந்தேதி திருமணம் நடந்தது. அனில் குமார் சென்னை ஆர்.கே. நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின்போது 101 பவுன் நகையும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணமும், ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
திருமணம் முடிந்த சில நாட்களில் எனது கணவர் அனில்குமார் தனக்கு கடன் இருப்பதாக கூறி மேலும் ரூ.30 பவுன் நகை வாங்கி வருமாறு என்னை கொடுமைப்படுத்தினார். எனது மாமியார் லலிதாவும் எனக்கு ஜாதகம் சரியில்லை. இதனால் எனது மகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கூறி என்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
அவரது உறவினர்கள் சாந்தி, ஸ்டாலின், அனில் குமார் ஆகியோரும் என்னை கொடுமை செய்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.
இது குறித்து மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ்காரர் சுனில்குமார், அவரது தாயார் லலிதா, சாந்தி, ஸ்டாலின், அனில் குமார் ஆகியோர் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
Average Rating