ஆலங்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் இடமாற்றம்!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டையில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 9–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செல்வம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், தாசில்தார் வெங்கடாசலம், டி.எஸ்.பி. சொக்கநாதன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதில் அப்பள்ளி ஆசிரியர்கள் இரு பிரிவாக செயல்படுவதும், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்கள் கூறி வருவதும் தெரிய வந்தது. மேலும் உதவி தலைமை ஆசிரியர் செல்வம் கடந்த 19–ந் தேதி சரியாக படிக்காத மாணவிகள் சிலரை பிரம்பால் அடித்தாராம். இதை மற்றொரு தரப்பினர் பாலியல் புகாராக திசை திருப்பியதாக கூறப்பட்டது.
இருப்பினும் பள்ளி மாணவிகளுக்கு குறிப்பிட்ட ஆசிரியர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதை வெளியில் சொல்ல முடியாமல் மாணவிகள் தவிப்பதாகவும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியர் செல்வத்தை கொத்தமங்கலம் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கும், மாணவிகளை தூண்டிவிட்டதாக கூறப்படும் ஆசிரியர் லாசரை ராப்பூசல் பள்ளிக்கும் இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி சண்முகம் நேற்று உத்தரவிட்டார்.
இட மாற்ற நடவடிக்கையுடன் நிறுத்தி விடாமல் முறையான விசாரணை நடத்தி பள்ளியில் நடைபெற்ற அனைத்து பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating