ஆனந்துக்கு டாக்டர் பட்டம்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தர் ஜேப்பியார் ஆனந்துக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்துக்கு இந்தியாவிலேயே டாக்டர் பட்டம் வழங்கும் முதல் கல்வி நிறுவனம் நம்முடைய பல்கலைக்கழகம் என்று அவர் பெருமையோடு குறிப்பிட்டார். மத்திய அரசு ஆனந்தை உரிய முறையில் கவுரவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த், விடா முயற்சி மற்றும் தமது துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணமே தான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் என்று கூறினார்.மாணவர்கள் கல்வியில் உரிய கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.