புரசைவாக்கம் சீர்திருத்த பள்ளியில் இருந்து 8 சிறுவர்கள் தப்பி ஓட்டம்…!!
புரசைவாக்கம் கெல்லீசில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் முதல் தளத்தில் உள்ள அறையில் தங்கியிருந்த 8 சிறுவர்கள் திடீரென கிரில் கேட் கதவை உடைத்து வெளியே வந்தனர். அவர்கள், சீர்திருத்த பள்ளியின் பின்பக்க சுவரில் ஏறிக்குதித்து வெளியில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுபற்றி தெரிந்ததும் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தலைமைச் செயலக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சங்கரன், இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய சிறுவர்கள் அனைவரும் சிந்தாதிரிப்பேட்டை, தாம்பரம், பூக்கடை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள், ஓட்டேரி சுடுகாடு வழியாக தப்பிச் சென்று இருப்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் இதே சீர்திருத்த பள்ளியில் 17 சிறுவர்கள் கதவை உடைத்து தப்பிச் சென்றனர். இதில் 7 பேர் மட்டுமே சிக்கி இருக்கிறார்கள்.
இதற்குள், மேலும் 8 பேர் தப்பிச் சென்று இருப்பது அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு சிறுவர்கள் தப்பிச்செல்வது இந்த ஆண்டில் 4–வது சம்பவம் ஆகும்.
Average Rating