தீவிரவாத பயிற்சி அளிக்க தேனி மாவட்ட சிறுவர்களை கடத்தும் கும்பல்…!!
தீவிரவாத இயக்கத்தில் ஆட்கள் சேர்க்க தேனி மாவட்ட சிறுவர்கள் கடத்தப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலை நம்பியே உள்ளது. விவசாய கூலி தொழிலாளர்களின் பெரும்பான்மையானோர் தங்கள் குழந்தைகளை பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். அதிலும் பெண் குழந்தைகளை இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கும் சம்பவங்களும் இம்மாவட்டத்தில் அதிகளவில் நடந்து வருகின்றன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களே கடத்தப்படுகின்றனர்.
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் இருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள் ஒரு சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாங்களாகவே வீட்டை விட்டு ஓடிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் உண்மையிலேயே கடத்தப்படும் சிறுவர்கள் தீவிரவாத பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
வறுமை நிலையில் உள்ள, படிப்பை பாதியில் கைவிட்ட சிறுவர்களை நோட்டமிட்டு கடத்தும் கும்பல் மாவட்டத்தில் நடமாடி வருகிறது. அந்த கும்பல் சிறுவர்களை மூளைச்சலவை செய்து வட மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். கடுமையான பயிற்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு சில சிறுவர்கள் அங்கிருந்து தப்பி வந்து விடுகின்றனர்.
இவ்வாறு வரும் சிறுவர்கள் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல் வேறு ஊர்களில் வேலை பார்த்தும் திருட்டில் ஈடுபட்டும் சிக்கிக் கொள்கின்றனர். தேனி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மாவோயிஸ்டுகள் நடமாட்ட அறிகுறியும் உள்ளது. இதுபோன்ற கும்பல் சிறுவர்களை கடத்தி செல்கின்றனரா? அல்லது வேறு தீவிரவாத கும்பலா? என தெரியவில்லை. உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுவர்களை கடத்தும் கும்பலை கண்டறிய வேண்டும்.
Average Rating