கடன் தொல்லை: இரு குழந்தைகளுடன் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை…!!
ஐதராபாத் நகரில் கடன் தொல்லை தாங்க முடியாததால் இன்று காலை இரு குழந்தைகளுடன் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சிதாராம்பாக் பகுதியை சேர்ந்தவர் ராஜு. பழைய இரும்பு வியாபாரம் செய்துவந்த இவர் தனது மனைவி ராதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் இதே பகுதியில் வசித்து வந்தார். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட பலரிடம் பணத்தை கடனாக வாங்கியிருந்த ராஜு, அந்த தொகையை திருப்பித்தர இயலாமல் திண்டாடி வந்ததாக கூறப்படுகிறது.
தினந்தோறும் காலையில் பொழுது விடிந்ததும் வீட்டு வாசலில் கடன்காரர்கள் வந்து நிற்பதால் சில நாட்களாக ராஜு மனஉளைச்சலுக்கு ஆளானார். இன்று காலை அவரது வீட்டின் வாசல் கதவு வெகு நேரமாக திறக்கப்படாததால், அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் ஜன்னல் வழியாக வீட்டினுள் எட்டிப் பார்த்தனர்.
அப்போது தனது குழந்தைகளுடன் ராஜுவும், ராதிகாவும் தூக்கில் பிணங்களாக தொங்கினர். இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்துவந்த ஹபீப்நகர் போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்காக ஒஸ்மானியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating