கோட்டையில் ஏறி செல்பி எடுக்கப்போய் உயிரைப் பறிகொடுத்த இளைஞர்: ஜம்மு-காஷ்மீரில் சோகம்…!!
தகவல் தொழில்நுட்பத்தின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு, நவீன செல்போன்களில் விதவிதமாக செல்பி எடுத்து வெளியிடுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து எடுக்கும் செல்பிக்கு, வலைத்தள நண்பர்களிடையே அதிக வரவேற்பு இருப்பதால் சிலர் உயிரைப் பணயம் வைத்துக்கூட செல்பி எடுத்து லைக் வாங்குகின்றனர். ஆனால், அதுவே சில நேரங்களில் அவர்களுக்கு எமனாகிவிடுகிறது.
அந்த வகையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரீசி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் குப்தா (20) என்ற இளைஞர், செல்பி எடுப்பதற்காக உயரமான கோட்டை மீது ஏறியபோது தவறி விழுந்து இறந்துள்ளார்.
நேற்று மூன்று நண்பர்களுடன் ரீசி கோட்டைக்குச் சென்ற அபிஷேக், கோட்டை உச்சியில் ஏறி செல்பி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது ஆபத்தானது என்று நண்பர்கள் தடுத்துள்ளனர். ஆனால், அதையும் மீறி மேலே ஏறும்போது தவறி பாறாங்கல் மீது விழுந்ததால் தலையில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்பி மோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரை இழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Average Rating