மேற்கு வங்காளத்தை உலுக்கிய கம்துனி கற்பழிப்பு-கொலை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை…!!
மேற்கு வங்காள மாநிலம் கம்துனி கிராமத்தில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டம் கம்துனி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தார். பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு தனியாக நடந்து சென்றபோது, அவரை சிலர் கற்பழித்து படுகொலை செய்தனர். மாநிலத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 9 பேரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
கொல்கத்தா கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், 6 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி சஞ்சிதா சர்க்கார் வியாழக்கிழமை அறிவித்தார். 2 பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார்.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளிகளான அமினுல் அலி, சாய்புல் அலி, அன்சார் அலி ஆகியோருக்கு மரண தண்டனையும், இமானுல் இஸ்லம், அமினுல் இஸ்லம், போலா நஸ்கர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இது அரிதினும் அரிதான வழக்கு இல்லை என்றும், தங்கள் கட்சிக்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கக்கூடாது என்றும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அவர்களின் வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்தார்.
Average Rating