விமானத்திற்குள் யோகா-தியானம் செய்து அமர்க்களம் செய்த பயணி கைது…!!
அமெரிக்காவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணி, இருக்கையில் அமராமல் யோகாசனம் மற்றும் தியானம் செய்து அமர்க்களம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹவாய் மாநிலம் ஹானலூலு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் நாரிடா விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணம் செய்த பயணி ஒருவர், சாப்பாடு வழங்கப்படும் நேரத்தில் திடீரென இருக்கையைவிட்டு எழுந்து விமானத்தின் பின்பகுதிக்குச் சென்று யோகாசனம் மற்றும் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
இதனை அவரது மனைவியும், விமான ஊழியர்களும் தடுத்து அவரது இருக்கையில் அமரும்படி கூறியதால் கடும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அதே விமானத்தில் பயணம் செய்த கடற்படை வீரர்கள், அவரை இருக்கைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போதும் முரண்டு பிடித்ததுடன், வீரர்களை கடித்துள்ளார்.
இந்த அமர்க்களம் காரணமாக விமானம் உடனடியாக ஹவாய்க்கு திருப்பப்பட்டது. அங்கு தரையிறங்கியதும், பைலட் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பயணியை அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
Average Rating