திண்டுக்கல்லில் விஷ ஊசி போட்டு மகளுடன் தற்கொலை செய்த டாக்டர்..!!
திண்டுக்கல்லில் விஷ ஊசி போட்டு மகளுடன் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் நந்தவன பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது60). வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி உமாதங்கம் (57). இவர்களுக்கு 2 மகள்கள்.
முதல் மகளுக்கு திருமணம் ஆகி கோவையில் கணவருடன் வசித்து வருகிறார். 2வது மகள் வானதி (28). வக்கீலுக்கு படித்து முடித்துள்ளார். இவருக்கும் மதுரையை சேர்ந்த வக்கீல் கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வானதி தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.
ஆனால் அதன்பிறகும் வானதிக்கும் அவர் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வானதியும் அவரது தந்தை சோமசுந்தரமும் வெளியே செல்வதாக வீட்டில் கூறி விட்டு காரில் சென்றனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
ஆர்.எம்.காலனி 4 ரோடு சந்திப்பில் ஒரு கார் அனாதையாக நின்று கொண்டிருந்தது. இரவு ரோந்து பணிக்கு வந்த போலீசார் காரை சோதனையிட்டதில் காருக்குள் இருவர் பிணமாக கிடந்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்தது சோமசுந்தரம் மற்றும் அவரது மகள் வானதி என தெரிய வந்தது.
அவர்கள் அருகிலேயே ஊசி போடுவதற்கான சிரிஞ்ச் கிடந்தது. எனவே அவர்கள் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இருவரது உடல்களையும் நகர் மேற்கு போலீசார் கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating