பாலஸ்தீன சபாநாயகர் கைது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை
பாலஸ்தீன சபாநாயகரை இஸ்ரேல் ராணுவத்தினர் திடீர் என்று கைது செய்துள்ளனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 25 ம் தேதி இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை பாலஸ்தீன ஹமாஸ் இயக்க தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் ராணுவத்தினர் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை வேட்டையாடியது. ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்புடைய பாலஸ்தீன மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உள்பட 60 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் கைது செய்தனர்.
ரமலா நகரில் உள்ள பாலஸ்தீன சபாநாயகர் அப்துல் அஜீஸ் குவாசிக் வீட்டை இஸ்ரேல் ராணுவத்தினர் திடீர் என்று முற்றுகையிட்டனர். பிறகு அவரை கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டனர்.
ஹமாஸ் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்டது முதல் இவர்தான் அந்த இயக்கத்திற்கு தலைவராக இருந்து வருகிறார் என்றும் கைது செய்வோர் லிஸ்டில் இவரது பெயரும் நீண்ட நாட்களாக உள்ளது என்றும் அதனால்தான் அவரை கைது செய்ததாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறின. பாலஸ்தீன சபாநாயகர் வீடு அருகே 15 யூதர்களும் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் கூறினர்.
இஸ்ரேல் வீரர்கள் இருவரை லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்தி சென்றதை அடுத்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாலஸ்தீன சபாநாயகரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது வளைகுடா நாடுகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.