சந்தவாசல் அருகே தந்தையை கொன்ற பிளஸ்-2 மாணவன் ஜெயிலில் அடைப்பு…!!
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள அருந்ததிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 50). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவரது மனைவி சுமதி (40). இவர்களது மகன் சதீஷ் (17). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். கடந்த 27-ந் தேதி சகாதேவன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக, சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் மகன் சதீஷை பிடித்து விசாரித்தனர். அதில், தந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி சதீஷ் கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதை கேட்டு போலீசாரே அதிர்ந்து போயினர். விசாரணையில், சதீஷ் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்:- தந்தை சகாதேவன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, தாயுடன் வீண் தகராறு செய்து ஆபாச வார்த்தையால் திட்டுவார்.
தகராறை தடுக்க முயன்ற என்னையும், தாக்க முற்படுவார். தேவையில்லாத வார்த்தைகளால் கடிந்து கொட்டுவார். தந்தையின் மோசமான நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை.
இவை தொடர்ந்ததால், தந்தை மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. தந்தையை தீர்த்து கட்டி விட்டால், இனி நிம்மதியாக வாழலாம் என எண்ணினேன். ஆனால், தந்தையுடன் நேரடியாக மோதி அவரை கொல்ல முடியாது.
இதனால் அவர், குடிபோதையில் கிடக்கும் நேரத்தில் தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்தேன். அதற்கான நேரத்தை எதிர் பார்த்து காத்திருந்தேன்.
சம்பவத்தன்று தந்தை சகாதேவன் குடிபோதையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். ஜன்னல் கதவில் இருந்த கயிற்றை எடுத்து வந்து தந்தையின் கழுத்தில் சுற்றினேன்.
அப்போது, தந்தை அசைவின்றி கிடந்தார். இதையடுத்து, கயிற்றை வேகமாக இறுக்கினேன். சிறிது நேரம் எனது பிடியில் இருந்து தப்பிக்க தந்தை போராடினார்.
ஆனால் விடாமல் இறுக்கியதால் தந்தை இறந்து விட்டார். எனது திட்டம் நிறைவேறியது. நான் சிக்கிக் கொள்ளாமல் இருக்க எதுவும் நடக்காதது போல இருந்தேன். ஆனாலும், நான் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, மாணவன் சதீஷை கைது செய்த போலீசார், 17 வயதுடைய சிறார் குற்றவாளி என்பதால் திருவண்ணாமலை சிறார் நீதிமன்ற குழுமம் முன்பு ஆஜர்படுத்தினர். பிறகு, கடலூர் சிறார் ஜெயிலில் சதீஷ் அடைக்கப்பட்டான்.
சதீஷ் எதிர்கால வாழ்க்கை நெறிமுறைகளை பள்ளியில் கற்க வேண்டிய வயதில், தந்தையை கொன்று விட்டு ஒரு போர் குற்றவாளி போல கூண்டில் அடைப்பட்டுள்ளான்.
பழி தீர்க்கவே அவன் பாடம் கற்றுள்ளான். உளவியல் ரீதியாக அவனது மனதில் ஏற்பட்ட பாதிப்புகள் தந்தை என்றும் பார்க்காமல் அவனை கொலை செய்ய தூண்டியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
Average Rating