திசையன்விளை அருகே தாய்-மகள் தற்கொலை: காதல் கணவரிடம் விசாரணை..!!
நெல்லை மாவட்டம் இட்ட மொழி அருகே உள்ள வீரணாஞ்சேரியை சேர்ந்த பெருமாள் மகன் விஜயகுமார்(வயது 30). இவரும், பரப்பாடி அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த மகாலட்சுமியும்(28), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஜயா(9), திவ்யா(8) ஆகிய இரண்டு மகள்கள், 4 வயதில் வெங்கடேஷ் என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் மகாலெட்சுமி தனது 3 குழந்தைகளுடன் விஜய அச்சம்பாடு காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் வாழைப்பழத்தில் குருணை மருந்தை வைத்து 3 பிள்ளைகளுக்கும் கொடுத்தார். இதில் சிறுமி திவ்யாவும், விஜயாவும் வாழைப்பழத்தை சாப்பிட்டனர். ஆனால் மகன் வெங்கடேஷ் விஷம் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட மறுத்து விட்டான்.
பிள்ளைகளுக்கு கொடுத்த அடுத்த நிமிடமே மகாலட்சுமியும் விஷம் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மகாலட்சுமியும், திவ்யாவும் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயாவை அவரது தந்தை விஜயகுமார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:
கலப்பு காதல் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு தனது பெற்றோர் வீட்டுடன் எந்தவித தொடர்பு இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சரிவர வேலைக்கு செல்லாமல் வீண் செலவு செய்வதற்காக மாடு விற்ற பணத்தை கேட்டு தனது கணவர் தகராறு செய்ததால் மகாலட்சுமி மனம் உடைந்தார்.
பொறுப்பில்லாத கணவன், பெற்றோர் வீட்டிலும் ஆதரவு இல்லாத நிலை என்பதால் மனவேதனை அடைந்த மகாலட்சுமி தனது மகள்கள் படித்த பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கிருந்த தனது மகள்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று இந்த துயர முடிவை எடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் விஜயகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மகாலெட்சுமி மீது கொலை, கொலை முயற்சி, தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating