தயாரிப்பாளர் சங்க தேர்தல்: பெரும்பான்மையான பதவிகளை கைப்பற்றிய விஷால் அணி..!!
தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் பதவிகளை நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் கைப்பற்றியுள்ளனர்.
தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த தேர்தலில் ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் தற்போது ஒரே அணியாக சேர்ந்துள்ளனர். எனவே விஷால் அணி, கேயார் அணி, ராதாகிருஷ்ணன் அணி ஆகிய 3 அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, பாண்டிராஜ், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
அதேபோல், கேயார், ஆர்.கே.செல்வமணி, செல்வராகவன், தேவையாணி, ராதாரவி, குஷ்பு சுந்தர், ஐஸ்வர்யா தனுஷ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பாடகர் விஜய், நாசர், பி.வாசு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மொத்தமாக 1059 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
இதனையடுத்து மாலை 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே விஷால் அணியினர் முன்னிலை பெற்று வந்தனர்.
இறுதியில் 143 வாக்குகள் வித்தியாசத்தில் தலைவர் பதவிக்கு விஷால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஷாலுக்கு மொத்தம் 476 வாக்குகள் கிடைத்தது. அதேபோல், ராதாகிருஷ்ணனுக்கு 333 வாக்குகளும், கேயார் 223 வாக்குகளும் பெற்றனர்.
விஷால் அணி சார்பாக பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஆர் பிரபு, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் வெற்றி பெற்றனர். ஆனால், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மிஷ்கின் தோல்வியடைந்தார். எதிரணியில் இருந்த ஞானவேல்ராஜா வெற்றி பெற்றார்.
இதையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் பொறுப்பேற்க உள்ளார். இதனால் விஷால் அணியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Average Rating