இத்தாலியில் கைதான புலிச் சந்தேகநபர்கள் 33 பேரும் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களே!!
இத்தாலியில் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர்கள் 33 பேரும் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இத்தாலியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என கைதானவர்கள் புலிகள் இயக்கத்துக்கு பெருமளவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் எனவும், இவர்கள் மாதாந்தம் 3.5 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகளைச் சேகரித்து, சுவிசில் உள்ள வங்கிகள் மூலமாக இலங்கையில் உள்ள புலிகளுக்கு அனுப்பி வந்துள்ளது பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன்னதாக இத்தாலியில் உள்ள தமிழர்கள் சிலர் பொலிசாரிடம் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். அவர்களது முறைப்பாடுகளில் புலிகள் கட்டாய கப்பம் அறவிடுதலில் ஈடுபடுவதாகவும், அவற்றை மாதாந்தம் வழங்க மறுப்பவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே புலிகளுக்கு ஆதரவாக கட்டாய வசூலிப்பில் ஈடுபட்டு வந்த 33 பேரை இத்தாலியப் பொலிசார் ஆதாரங்களுடன் கைது செய்துள்ளனர். இதேவேளை இங்கிலாந்தின் ஏ.ஜி.ஐ என்னும் செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில், மாதாந்தம் உலகம் முழுவதும் புலிகளுக்காக 100 மில்லியன் பவுண்டுகளைச் சேகரித்து அனுப்புவதாகவும், இதில் 3.5 மில்லியன் பவுண்டுகள் இத்தாலியில் மாத்திரம் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைக் கைது செய்வதற்கு இத்தாலிய பயங்கரவாத தடுப்பு பொலிசார் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரித்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating