பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக காரணம் இந்தியாவும், சீனாவும்தான் : அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு!!
‘‘பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம்’’ என அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது தொடர்பாக பாரீசில் நடந்த ஐநா கூட்டத்தில் பருவநிலை வரைவு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், அதன் பின் அதிபர் டிரம்ப் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா, சீனா போன்ற நாடுகளே பலன் அடைவதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று நடந்த பழமைவாத அரசியல் நடவடிக்கை குழு கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது: பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒரு பேரழிவாகும். அதில் நமக்கு மட்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நாம் ஏராளமான எண்ணெய், நிலக்கரி வளத்தை கொண்டுள்ளோம். அதனால், உலகின் முன்னணி நாடாக திகழ்கிறோம். ஆனால், பருவநிலை ஒப்பந்தத்தில் சேர்ந்தால் அந்த வளங்களை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். அது மற்ற நாடுகளுடன் நாம் போட்டி போட முடியாத சூழ்நிலையை உருவாக்கும். அது நடக்கக் கூடாது. நடக்கவும் விட மாட்டேன். இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு 2030ம் ஆண்டில்தான் நடைமுறையாகும்.
ஆனால், நமக்கு உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் வகையில் உள்ளது. ஏனெனில் சீனா வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கிறது என்கிறார்கள். நாம் வளர்ந்த நாடு என்பதால், வளரும் நாடுகளுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்ததால் வளரும் நாடுகள் என சொல்லிக் கொள்ளும் பெரிய நாடுகளான இந்தியா, சீனா போன்றவை பலன் பெறும். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் பல கோடி டாலர்களை இழக்கச் செய்வதுடன், வேலைவாய்ப்பை அழித்து, எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளை முடக்கும் என்பதாலே விலகினோம். இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating