நீரவ் மோடிக்கு வெளிநாட்டில் இருக்கும் சொத்தை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி: மும்பை கோர்ட் பச்சைக்கொடி!!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி தொடர்பாக, வைர வியாபாரி நீரவ் மோடிக்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை 2 வழக்குகளை பதிவு செய்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. வைர வியாபாரி நீரவ் மோடி, அவருடைய மாமாவும் கீதாஞ்சலி குரூப் தலைவருமான மெகுல் சோக்ஷி மற்றும் அவர்களுடைய கம்பெனிகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் நீரவ் மோடியும் சோக்ஷியும் ஏற்கனவே வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டனர். இவர்களுக்கு ஹாங்காங், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு குடியரசு, தென்னாப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூரில் சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள நீதிமன்றம் மூலமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்கை விசாரித்து வரும் பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெளிநாடுகளில் உள்ள நீதிமன்றத்துக்கு இதற்கான ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும். எல்.ஆர். எனப்படும் இந்த ஆணையை பிறப்பிக்கக்கோரி அமலாக்கத்துறை மனு ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் ெசய்திருக்கிறது.
இந்த மனு சிறப்பு நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அரசு வழக்கறிஞர் ஹிதேன் வினிகாவ்கர் தனது வாதங்களை எடுத்துரைத்தார். நீரவ் மோடிக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். இதற்கிடையே அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீரவ் மோடியின் வெளி சொத்துக்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு ஆணை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் நீரவ் மோடியின் சொத்துக்களும் முடக்கப்படும்.
Average Rating