எப்பவாவது குடிச்சா என்ன தப்பு?!(மருத்துவம்)

Read Time:9 Minute, 29 Second

மது அருந்துவதில் பலவகைகள் உண்டு. அவற்றில் சமீபகாலமாக பலரிடமும் காணப்படும் ஒரு வினோதமான வகை Social drinking. ‘ஏதாவது ஃபங்ஷன், பார்ட்டின்னா மட்டும்தான் குடிப்பேன். அதுவும் காஸ்ட்லியான சரக்கு மட்டும்தான்… அதுவும் ரொம்ப லிமிட்டா…’ என்கிற பெருமை பீற்றிக் கொள்கிற வகை இது. இந்த சோஷியல் டிரிங்கிங் முறையும் தவறானதா? தரமான மது அருந்துவதாலும் சிக்கல் வருமா? இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் பாசுமணியிடம் கேட்டோம்…

‘‘இன்றைய தலைமுறையினரிடையே மது அருந்தும் பழக்கம் சர்வசாதாரணமாக அதிகரித்துள்ளது. இது மோசமான சமூகத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குடி என்பது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சமூகம், குடும்பம் ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளைத் தரக்கூடியது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் நோய், ரத்தசோகை, அதிகமான உடல்சோர்வு, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம், கணையம் பாதிப்பு, கணையத்தில் காயங்கள், வயிற்றுப் புண், கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம், சர்க்கரை நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, தோல் நோய்கள் (Facial Erythema), தசைகள் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம், இதய நோய்கள், ரத்தசோகை, மூட்டு நோய், தொற்று நோய்கள், புற்றுநோய், வலிப்பு நோய், மனப் பிரச்னைகள், தாம்பத்யப் பிரச்னைகள், மன ஊசலாட்டம், தீவிர மனநோய் (Psychosis syndrome), மனப்பதற்றம் (Anxiety), நடத்தைக் குறைபாடு (Conduct Disorder), நினைவு இழத்தல், மயக்கம் (Withdrawal symptoms) இப்படி மதுவால் வராத நோய் என்று ஒன்று இல்லை. அந்த அளவுக்கு மது நம் உடலுக்கு நோய்களை உண்டாக்கக்கூடியது.

நாம் உட்கொள்ளும் எந்த உணவும் நம் உடலில் செரிப்பதற்கு மரபுரீதியான காரணம் இருக்கிறது. அந்த அடிப்படையில் இயற்கையிலேயே ஆல்கஹாலை செரிக்கக்கூடிய திறன் நமக்கு கிடையாது. குறிப்பாக, ஆசியா கண்டத்தினருக்கு ஆல்கஹாலை செரிக்கக் கூடிய நொதிப் பொருள் மரபுரீதியாகவே கிடையாது. மேலை நாடுகளில் இந்தப் பிரச்னை வேறுவிதமாக இருக்கிறது. இதனால் அவர்களும் கூட மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

உணவுப் பொருட்களை செரிக்கக்கூடிய நொதிப் பொருட்கள் இரைப்பையில் சுரக்கும். அது உணவை ஜீரணமடையச்செய்து உடலுக்குத் தேவையான சத்துக்களை உறிஞ்சிக்கொள்வதற்கு உதவும். அந்த வகையில் ஆல்கஹாலை செரிக்கக்கூடிய நொதிபொருள் நம் உடலில் சுரப்பதில்லை. அதுவே, எல்லா நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.

ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையில் கிடைக்கக்கூடிய கள்ளைக் குடித்தார்கள். அது அப்போது அவர்களுக்கு தேவைப்பட்டது. அதுவும் கூட அதை அவர்கள் மறைவாகத்தான் யாருக்கும் தெரியாமல் செய்தார்கள். ஏனென்றால் குடிப்பது என்பது நல்ல பழக்கம் இல்லை என்பதையும் நம் முன்னோர்கள் அப்போதிலிருந்தே போதித்து வருகிறார்கள். சுகாதார விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் இந்த காலத்தில் தண்ணீரைக் கூட கொதிக்க வைத்துதான் குடிக்கிறோம்.

அந்த அளவுக்கு நம் உடலைப் பற்றியும், உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது மது என்பது எந்த வகையில் நம் உடலைப் பாதிக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்’’ என்கிற மருத்துவர் பாசுமணி, சோஷியல் டிரிங்கிங் பற்றித் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘Social drinker வகையினர் எப்போதாவது கொண்டாட்டத்தின்போது மட்டும் அல்லது விழாக்காலங்களில் மட்டும் மாதத்துக்கு ஒரு முறையோ மது அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். இது அவர்களை உடளவிலும் மனதளவிலும் சமூகம், குடும்ப அளவிலும் பெரிதாக பாதிப்பதில்லை. அதனால், இதை அவர்கள் பெருமையுடனே கடைபிடிக்கிறார்கள்.

இடைவெளிவிட்டு குடிக்கும்போது அது அவர்களுக்கு எந்த பிரச்னையும் தருவதில்லை. காரணம் ஒரு முறை மதுவால் பாதிப்படைந்த கல்லீரல் தன்னை சரிசெய்து கொள்கிறது. இதனால் சோஷியல் ட்ரிங்கர்கள் எந்த உடல் நல பாதிப்பும் இல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். அதை அவர்கள்
பெருமையுடனும் நினைக்கிறார்கள்.

ஆனால், திரும்பத் திரும்ப இந்த சோஷியல் டிரிங்கிங் நடக்கும்போது கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கவே செய்யும். அதிகமாகக் குடிப்பவர்களுக்கு 10 வருடத்தில் கல்லீரல் செயல் இழந்தால் இவர்களுக்கு இன்னும் சில வருடங்கள் கூடுதலாகி செயல் இழக்குமே தவிர, பாதிப்பு என்பதை சோஷியல் டிரிங்கர்களும் தவிர்க்க முடியாது.

சோஷியல் டிரிங்கர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மது என்பது ஒரு நச்சு. நம்முடைய உடல்நிலையை உருக்குலைக்கக் கூடிய ஒரு ரசாயனம். அது எப்போது குடித்தாலும், எவ்வளவு குடித்தாலும், என்னதான் தரமான வகையில் குடித்தாலும் அதன் பாதிப்பு ஒன்றுதான். சமீபகாலமாக பெண்களும் கூட எப்போதாவதுதான் என்று சோஷியல் ட்ரிங்கிங் பழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இதுவும் விபரீதமான போக்கு. பெண்களுக்கு மதுவின் பாதிப்பு ஆண்களைவிட பலமடங்கு அதிகம்’’ என்கிறார்.

சோஷியல் டிரிங்கிங் உளவியல் ரீதியாக என்ன விளைவுகளை உண்டாக்கும் என்று உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜிடம் பேசினோம்…‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு 60 முதல் 70 சதவிகித ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதில் சோஷியல் ட்ரிங்கர் என்று தனி பிரிவாக இருந்தும் மது அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். குறிப்பாக, மூன்று பேர் மது அருந்தினால் அதில் இரண்டு பேர் சோஷியல் டிரிங்கர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் சராசரி குடிகாரர்களிட மிருந்து தங்களை வேறுபடுத்தி காட்ட விரும்புவார்கள். விழாக்காலங்களில் மட்டும் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் என உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் எந்த பாதிப்பும் அடையாது என்று நம்புவார்கள். ஆனால், உளவியல்ரீதியாக ஒருவரால் சோஷியல் டிரிங்கராகவே தொடர முடியாது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு குடிக்கும் மதுவின் அளவு அதிகமாகத் தேவைப்படும். பிறகு, எப்போதாவது என்கிற கால இடைவெளி குறையத் தொடங்கி, அடிக்கடி என்கிற நிலைக்குச் சென்றுவிடும்.

ஒருகட்டத்தில் மதுவுக்கு அடிமையாகிற சூழலும் ஏற்படலாம். ஒரு கட்டத்தில் குடிக்க ஆரம்பிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. அதனால் சோஷியல் டிரிங்கிங் என்கிற போலித்தனமான, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற பழக்கத்துக்கு ஆட்படாமல் இருப்பதும், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதுமே எல்லோருக்கும் நல்லது.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் பசவேஸ்வரா சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!!(உலக செய்தி)
Next post மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்!!